ஃ விழித்திருப்பான்
போய் எழுப்பலாமென
நெருங்கித்தொட்டால்
தூங்கிக்கொண்டிருந்தான்
அசந்து
எவ்வளவு நேரமாய்த்
தூங்குகிறான்?
அதிகத் தூக்கம்
உடம்புக்கு ஆகாதே
எழுப்பலாமெனக்
குரல் கொடுத்து
நெருங்கினால்
விழித்திருந்தான்
அவன்.
ஃ எந்நேரம்
எது நிகழுமென
எதிர்ப் பார்க்க முடியுமா?
என்ன என்னவோ
அது அதுப்பாட்டிற்கு
நேரப்படி நிகழ்த்திவிட்டு
யாருக்கும் காத்திராமல்
கழிந்து போகிறது
காலம்.
ஃ மலர்கள்
மலர்களைக் கொல்வதில்லை
யானைகள்
யானைகளைக் கொல்வதில்லை
பறவைகள்
பறவைகளைக் கொல்வதில்லை
வன்முறையால்
மனிதன் மட்டுமே
தன் இனத்தைத்
தானே அழிக்கிறான்
அழிவு
அவனுக்கு
அழகானதாகவேத்
தெரிகிறதோ?
ஃ பிறந்த குழந்தையைத்
தொட்டிலில் போட்டு
பெயர் வைத்துக்
கொண்டாடுகிறார்கள்
எல்லோரும்
சில குடும்பங்களில்
குப்பையிலே
போட்டு எடுக்கிறார்கள்
கூடையிலே, முறத்திலேயும்
போட்டு எடுக்கிறார்கள்
பார்க்கவே
சிரிப்பாகயிருக்கிறது
விஞ்ஞானம் வளர்கிறது
அதி வேகமாய்
ஒன்றை ஒன்றை மிஞ்சி
ஆமாம்,
குப்பையிலே,
கூடையிலே
முறத்திலே போட்டு
அதற்கு
முயல் என்று
பெயர் வைத்தவர்கள்
யார்? எவர்?
No comments:
Post a Comment