ஃ எறும்பு கடித்ததென்றோ
ஏகப் பசியென்றோ
மூத்திரம் பெய்த
ஈரமென்றோ
எதையோ உணர்த்திட
வீரிட்டழுது தரையில்
புரண்டுக் கொண்டிருந்தது
வாய்விட்டு எதையும்
சொல்லத் தெரியாதப்
பிஞ்சுக் குழந்தை
ஃ என்னுள் நீ
பூரணமாய் நிரம்பி விடு
மௌனத்தை வழங்கிவிடு
உன்னுள்
கரைகிறேன், மறைகிறேன்
சூட்சுமமாய்
சூன்யத்தோடு சூன்யமாய்
உன்
இருப்பில்
நான்.
ஃ பிறக்கும்போதும் சரி
மரணிக்கும்போதும் சரி
இருகைகளும்
வெறுமையாய்
காலியாகவே
இருப்பதனைப்
பார்த்திருக்கிறாயா?
பார்,
வெறுமையாகவே வந்தவன்
வெறுமையாகவே போகிறான்.
No comments:
Post a Comment