இருக்கிறேன் என்று
சொன்னவர்
எங்கே இருக்கிறார்
என்று சொல்லவில்லை.
அருகிலா, தொலைவிலா,
வீட்டிற்குள்ளேயா?
எங்கே என்று அனுமானிக்க
முடியவில்லை.
இருக்கிறேன் என்பது
நிகழ்காலந்தான்
அதுவே
கடந்த காலமாகக்
கூட இருக்கலாம்.
இப்பொழுது அவர்
தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
இருக்கிறேன் என்றாரா?
இருப்பவர்களும்
கடந்துச்செல்பவர்களும்
தான்
எப்பொழுதும் இருப்பார்கள்.
இருக்கிறேன் என்பது
இருப்பின் நிலை
இருக்கிறவர்களின்
முரண் மனநிலை.
இறக்கப் போகிறவர்களின்
கனவு நிலை.
*
No comments:
Post a Comment