*
புறவெளியின்
ஒதுக்கில்
அகன்றோ குறுகியோ
நீர் நிரம்பியுள்ள
குளம்.
பயன்பாட்டிற்கும்
பயன்படாத
நிலைக்குமாய் தனிமையில்
இருக்கின்றது பல்லாண்டுகளாய்…
காற்றும் தூசும்
மாசும்
வெப்பமும் குளிருமாய்
நீருக்குள் வாழ்உயிரினங்கள்
பாசிப் படர்ந்தக்
கொடிகள்
பசுமையாய் இலைவிரித்து
நடுவே
மெல்லிய தண்டு
உயர்ந்து
மொட்டு வைத்து
பின் பூத்து
மலர்ந்து அழகைக்
காட்டி நிற்கிறது.
ஒற்றை ஒற்றைப்
பூக்களாய்
பார்க்கும் கண்கள்
பரவசப்படுகின்றன
பறிக்க நினைக்கும்
கைகள்
அருகில் நெருங்கிப்
போகத் துடிக்கின்றன.
எந்தப்
பெண்ணின் கூந்தலையும்
அலங்கரிப்பதில்லை
எனினும்
கோயில் வாசல்களில்
சதா
காத்திருக்கின்றன.
விரும்பி வாங்கிக்
கொடுப்போர்
கைநிறைய ஏந்திச்
சென்று
அளிக்கின்றனர்
பக்தியோடு
அப்பூக்களே தினந்தினம்
நித்யபூசையில்
இறைவனின்
பாதக்கமலங்களில்
சரணடைந்து
வணங்கித் துதிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள்
உள்ளே நுழைய
அனுமதியில்லை
தாழ்த்தப்பட்டவர்கள்
பறித்தது
அனுமதியின்றி உள்ளே
நுழைகின்றன
சேற்றில் மலரந்ந
செந்தாமரைகள்.
*
No comments:
Post a Comment