*
வீட்டுவாசலில்
பூத்துக் குலுங்குகிறது
வேப்பமரம்.
துளசி செடியைச் சுற்றிச்
சுற்றி
வருகின்றன வண்டுகள்
மடல் விரித்து சிரிக்கிறது
கத்தாழை
மங்கலம் தெரிவிக்கிறது
மாவிலைத் தோரணம்.
வாழ்க வளமுடன் – என்று
வரவேற்கிறது ஸ்டிக்கர்.
கடிதங்கள் இல்லாமல்
காலியாக இருக்கிறது
தபால்பெட்டி.
பூட்டப்படாமல் கிடைக்கிறது
இரும்பு கேட்.
நாளிதழை வீசியெறிந்து
போகிறான் பேப்பர் பையன்
மீட்டர் கணக்கெடுக்க வந்த
மின்ஊழியர் அட்டைக் கேட்டு
காலிங்பெல் அழுத்துகிறார்.
உரத்தக் குரல் கொடுக்கிறாள்
காய்காரம்மா.
குப்பைக் கேட்டு மணியடித்து
அழைக்கிறார்கள்
நகராட்சி கடைநிலை ஊழியர்கள்.
என்னவாயிற்று,
இவ்வளவு நேரமாய் யார்
அழைத்தும் உள்ளிருந்து
எவரும் வெளி வரவில்லை
இப்படித்தானிருக்கிறது
எல்லா வீடுகளின் நிலவரம்
உள்ளே மனக் கதவம் திறவாது
பதுங்கியிருக்கின்றன
அசுரமன அன்பு உறவுகள்.
*
No comments:
Post a Comment