*
மனச்சிறகை விரித்து அன்றொரு
நாள்
அந்த மலைக் கோயிலுக்குப்
போனோம் ஞாபகமிருக்கிறதா?
மெல்ல மெல்ல படிகளில் ஏறியேறி
இயற்கையின் எழிலைப் பார்த்துப்
பார்த்து வழி நடந்தோம்.
எத்தனை எத்தனை கண்ணைக்
கவரும் அழகிய காட்சிகள்.
மறக்கமுடியுமா?
*
இளைப்பாற கொஞ்சநேரம்
கற்பாறையின் மீது அமர்ந்தோம்.
வி்ண்ணும் வெளியும் வெப்பமும்
மரங்கள் வீசும் காற்றை நுகர்ந்து
சுவாசித்து என்னவெல்லாம்
சலிப்பின்றி பேசினோம்
நினைவிருக்கிறதா?
*
இன்னும் மேலே ஏறினோம்
கோபுர வாயில் வரவேற்றது
அண்ணாந்துப் பார்த்து வியந்து
உள்நுழைந்தோம்.
மூலவரைத் தரிசித்து விட்டு
வெளியில் வந்துப் பிரகாரம்
சுற்றுச்
சுவரில் பதிக்கப்பட்டிருந்தக்
கற்சிலைகளின் ஒவ்வொன்றையும்
ரசித்து நகர்ந்தோம்.
*
அச்சிலைகளின் வடிவமைப்பு
கண்களின் நயப்பார்வை
கைகளின் அபிநயனம்
ஆணோடு மார்தழுவிய கொஞ்சல்
வெட்கத்தில் தலைக்கவிழ்ந்து
நாணம் இப்படி எத்தனையோ
அழகழகானச் சிற்பங்களின்
அழகில் மனம் லயித்தோம்
நினைவிருக்கிறதா?
*
அத்தனையும் அந்த கற்சிலைகளை
வடித்தக் கலைஞனின் அகமனக்
கற்பனைக் கனவா? நிஜமானக்
கனவா?.
அந்த அற்புதச் சிலைகளின்
கனவாய் நம் காதல் கனவும்
நிறைவேறுமென்று எத்தனை
நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
நினைவிருக்கிறதா?
*
நம் நம்பிக்கையைக் குலைத்த
சூறாவளி எது? கூனி யார்?
எப்படிப் பிரிந்தோம் என்பதை
நினைத்துப் பார்க்கவே இயலாது
நெஞ்சம் பதறித் தவித்தோம்.
அழுதோம் கதறினோம் பிரிந்தோம்
நெஞ்சம் மறந்தோமா?
இதோ, நாற்பதாண்டு காலம்
இலைகள் உதிரும் நேரமாய்
கடந்துப் போய்விட்டது.
இப்பொழுது நீ எங்கோ?
நான் எங்கோ? தனித்திருந்தாலும்
உன்னுள்ளும் என்னுள்ளும்
நிறைந்திருக்கும் நினைவலைகள்
அழித்திட முடியுமா? - அதை
நம் மரணம் மட்டுமே அழிக்கும்.
*
No comments:
Post a Comment