*
அழுகுரல் சத்தத்தோடு
விடிந்தது
அதிகாலை நேரம்
எதற்கென்று சொல்லாமல்
அழுவது குழந்தைகளின்
குணம்.
சமாதானத்திற்குப்
பிறகு
அழுகை நிறுத்தி
சிரித்தனர்.
பால் குடிக்க மறுத்து
என்னை
வினையாட அழைத்தனர்.
விளையாடினேன்.
கைபேசியை எடுத்துக்
கொண்டு
அவர்கள் அப்பாவிடம்
பேசி
விளையாடுவதை விளக்கினார்கள்.
பலூன்கள் ஊதிஊதி
பெருசாக்கி
வெடித்து மகிழ்ந்தார்கள்.
கள்ளிச் செடியின்
மடலை
ஒடித்து அதன் பசையை
முகம் கைகால்கள்
எல்லாம்
தடவித் தடவிச்
சந்தோஷித்தார்கள்.
என் முகமெல்லாம்
தடவி விட்டு
நல்லாயிருக்கா
என்று
கருத்துக் கேட்டார்கள்.
பதில் சொன்னேன்.
அவர்களின் மனசெல்லாம்
பூரிப்பு.
பறந்து வந்து வேப்பமரத்தில்
அமர்ந்தச் சிட்டுக்
குருவிகளை
எனக்குக் காட்டி
விட்டு
கைத்தட்டி விரட்டினார்கள்.
அவர்கள் இன்னும்
பால் குடிக்கவில்லை
நானும் பல் விலக்கவில்லை
டீ குடிக்கவில்லை
இப்படியே
அன்பும் பரிவும்
காட்டும்
அரும்புக் குழந்தைகளோடு
பகிர்ந்துக் கொண்டு
கழிகின்றன
எனக்கான பகல் நேரம்….!!
*
No comments:
Post a Comment